Tuesday 27 December 2011

How to write kavithai?In30 days?

30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி..?.

1. முதலில் கவிதை எழுதுவதற்கு முன், உங்கள் வாயில் வரும் வார்த்தைகளை சும்மா வைரமுத்து போல், நல்ல அழுத்தமான உச்சரிப்போடு உங்கள் ரூம்மேட்டிடமோ அல்லது மனைவியிடமோ சொல்லிப்பாருங்கள். அவர்கள் திட்டினாலோ அல்லது அடித்தாலோ, வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது அரைக் கவிஞன்.

2. சில சமயங்களில் முதலில் கூறிய முயற்சி உயிருக்கு உலை வைக்கும் எனவே, அவ்வாறு தோன்றிய வார்த்தைகளை,ஒரு பேப்பரில் கிறுக்குங்கள். பின் அதை ஒரு கோர்வையாக கோர்க்க,பொருக்குங்கள்.கிறுக்குவதால் நீங்கள் கிறுக்கன் என்றோ, பொருக்குவதால் நீங்கள் "பொருக்கி" என அழைக்கப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல.

3. நீங்கள் எதை பாடுபொருளாக கொள்ளப்போகின்றீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டுதான் மற்றவர்களை கொல்ல வேண்டும். உதாரணமாக "காதலி தின்னு கொடுத்த ஐஸ் குச்சி", "வீட்டிற்குள் வந்து விழுந்த பறவையின் சிறகு","நண்பன் குடித்து மீதம் வைத்த பீர் பாட்டில்", "அவள் குளித்துவிட்டு மீதம் வைத்துள்ள சோப்பு என யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு அந்த பொருள் பிரம்மாண்டமாய் இருந்தால் உத்தமம்.

4. முக்கியமாக கவிதை எழுதும்போது, சில வார்த்தைகளை பிரித்தும் சில வார்த்தைகளை சேர்த்தும் எழுதுதல் நலம் பயக்கும். உதாரணமாக "பெருங்கோபக்காரன்" என்பதை "பெருங்கோ உபகாரன்" என்றும் "எனக்கு என ஒருத்தி" என்பதை " எனக்கெனொருத்தி" என்று எழுதிப் பழக‌ வேண்டும்.

5. எதுகை, மோனையின் அவசியம் கவிதைகளில் மிக மிக முக்கியம்.உதாரணமாக ஊத்துக்குளி ஊர்மிளாவின் ஊர்வம்பென்று, எழுதலாமென்று ஒரு நம் பிரபல கவிஞர் குவிக் கன் முருகன் கவிதை ஒன்றில் படித்த ஞாபகம் அடியேனுக்கு.ஆதலால் ஊஊஊஊஊன்னோ அல்லது தூதூதூதூதூதூன்னோ போட்டு கவிதையெழுதுதல் நலம்.காகாகாகாகாகாகாகான்னு போட்டு கூட எழுதலாம்.

6. இவ்வகையான‌ எதுகை, மோனை தவிர புதியதாய் நீங்கள் யானை, பூனை, சிங்கம் , புலி போன்றவற்றையும் கண்டுபிடித்து உட்புகுத்தினால் நல்லதொரு கவிதையை உங்களால் சமைக்க முடியும்.அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் மற்றும் இன்ன பிற சமாச்சார‌ங்கள் சரியாக இருக்க வேண்டும்.

7. கவிதைகள் இந்த இடத்தில்தான் பிறக்குமென சொல்ல முடியாது, உதாரணமாக நீங்கள் சாலையில் நடக்கும் போது வாகனங்களின் முகத்தில் தென்படும் நம்பர் பிளேட்கள் கூட நல்லதொரு கவிதையை படைக்க வல்லவைதாம்.சில சமயங்களில் சைடிஷாக பயன்படுத்தும் ஊறுகாயும்.எனவே, சாலையில் நடக்கும்போது கூட நீங்கள் அனைத்தையும் கவனித்தபடி நடந்து செல்ல வேண்டும்.(வெளாட்டா நடக்காம அலர்ட்டா நடங்க பாஸு..!)

8. முக்கியமாக நீங்கள் கவிதை எழுதும்போது, வெகு சிலருக்கு மட்டுமே புரியும்படியான வார்த்தைகளை ஆங்காங்கே பயன்படுத்தவேண்டும். உதாரணமாக பிரக்ஞை, யௌவனம், காந்தள்,தற்றிடம்,கழிவிரக்கம் போன்ற வார்த்தைகளை முடிந்த மட்டில் தவிர்த்து விடாதீர்கள்.

9.இதுதான் முக்கியமான பாயிண்ட். நீங்கள் எழுதும் கவிதையானது எளிதில் யாருக்கும் புரிந்து விடக்கூடாது.அவ்வாறு புரிந்து விட்டால், மன்னிக்கவும் நீங்கள் கவிஞனே இல்லை.எனவே முடிந்த அளவு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி சாமானியனுக்கும் புரியாதவகையில் வார்த்தைகளை உங்கள் கவிதைகளில் நீங்கள் புகுத்த வேண்டும்.

10. இப்போது, ஓரளவு உங்களுக்கு ஒரு கவிஞனுக்குரிய ஒரு 'இது' வந்திருக்கும். அதை அப்பிடியே மெயின்டைன் பண்ணி கொண்டுவந்தீர்களேயானால், இந்நாள் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா நாட்களும் தங்களுக்கு கவிதை எழுதவரும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் தற்போது நீங்களும் ஒரு கவிஞன் அல்லது கவிஞை.(?).

டிஸ்கி: ஒரு பின் நவீன‌த்துவ‌ பிரபல கவிஞருடன் சாட்டில் உரையாடும்போது, அவர் கற்றுத்தந்தது.

Next மீட் பண்ணுவோம்....

No comments:

Post a Comment