Tuesday 27 December 2011

உயிர்த்தெழுதல்!

இரவொன்றுக்கு ஒன்று வீதமென
பேய்க் கதைகள் பல
சொன்ன பாட்டியவள்
உக்கிரமாய் வெயில் பெய்த
நாளொன்றில்
மரித்துப் போனாள்!

அவளைப் புதைத்த
நாளின் இரவில்,
ஊரை வலம் வந்த
கருப்பண்ண சாமியின் குதிரை
எனக்கான கதையை
காற்றில்
எழுதிச் சென்றது.

நட்பு!

பழையன கழித்தலில்
சிக்கியது
நண்பனொருவன் முன்பு
எழுதிய கடிதமொன்று!
கடிதத்தில் நண்பனின்
பெயரிருந்த இடம்
கரையான் அல்லது
க‌ரையான்களுக்கு
இனித்திருக்க வேண்டும்.

யாரிவன் என்ற கேள்வி
நினைவுகளின் எண்ணெயில்
வழுக்கிக் கொண்டே
இருந்தது பதிலேயின்றி.
கடைத் தெருவில்,
மிட்டாய் திருடிய சக‌
கால்சட்டைகளையும்
சுவரேறி சிறுநெல்லி
பறித்த இளம்பிராயங்களையும்
Facebook- ல் பிடிப்பது
சற்று கடினம்தான்!

தேடல்!

மனப் பாலையின்
சுடுமணல்
பாதச் சுவடுகளில்
எங்கிருக்கிறது எனக்கான
கொலுசு
அணிந்த பாதத்தின்
சுவடு.

மழை
கரைத்திருக்கலாம்..
காற்றானது
கலைத்திருக்கலாம்.
எதுவாகினும்,
மீட்டெடுக்க முடியாத
தருணங்களின்
தொகுப்புதான் காதல்!

தொட்டி மீன் !

மனிதர்களற்ற வீட்டின்
தொட்டியினுள் சலனமற்று
வாழ்தலின் பொருட்டு
உலாவும் மீனுக்கு
சமுத்திரத்தின் சுதந்திரமோ
வலை நோக்கிய போராட்டமோ
எதுவாகினும்
தெரிவதில்லை!

அகாலப்பறவை...

அதியுயரத்தில் சிறகடிக்கும்
ஃபீனிக்ஸின் இறகு நுனிதனில்
துயரங்களனைத்தும்
உடன் பறக்கும் உணர்வில்
அமர்ந்திருக்கிறேன்.

கீழ் நிலத்தடி நீரில்
குட்டைக்கால் வாத்துகள்
நீந்திச் செல்லும் சலனம்
செவி மடல்களை உரச,
ஆகாயத்திலிருக்கும்
சிறு தெளிவு
கிடைக்கிறது.
உடன் பயமும்.

மேலெழும்பும் பயத்தின் உயரம்,
ஃபீனிக்ஸின் உயரத்தை விட
அதிகமாகதிகமாக,
மெல்ல மெல்ல‌
கீழிறங்குகிறேன்.

படுக்கை விரிப்புத்
தலையணையையென்
கண்ணீர் நனைத்திருந்த‌து.
நாக்கு முழுவதும்
உறைக்கும் உவர்ப்பு.
அவ்வகால‌த்தின் மறுபுறம்
அந்த ஃபீனீக்ஸ்
எரிந்து போயிருக்கலாம்!

உடலின் மொழி..

மொழிகளனைத்தும் மறந்து
சங்கேதச் செய்கைகளையென்
வாழ்வின் ஊடு சரடாய்க்
கொண்டிருக்கும் நிலையில்,
பின்னிரவின் மேஜை விளக்கொளியில்
உன் மார்பில் முகம் புதைத்து
எனக்கான உலகின் வாசல்
தொடும் முனைப்புக்காய்
உன்னில் முயங்குகிறேன்.

முகம் நிமிர்த்தி, உன்
இமையின் மெல்லிய‌
அழுத்தத்திலினால் வழியும்
கண்ணீரானது என்னைத் தொட‌
எனக்கே எனக்கு
மட்டுமேயான மொழியாய்
என்னுள்ளே நீ
நிறைகிறாய்.

முத்தப் பிசுபிசுப்பு..

இலக்கையடைந்த கப்பலின்
நங்கூரப் பாய்ச்சலினுடைய
அதிர்வுகள் கடலினுள்ளிருந்து
மேலேறி ஒலிக்கும் வெளியில்,
மிதந்து வந்தது அன்றவள்
அனுப்பிய முத்தமொன்று.

இராஜாளிப் பறவையின்
அலகையொத்தென்
அதரங்கள் குவித்து
நான் அனுப்பிய முத்தத்தின்
பயணம் அமைந்ததுமதை
நோக்கியே.

இவ்விரண்டும் இணைந்த
தருவாயில், ஆகாயம்
கிழிந்து பொழிந்தது
ஆலங்கட்டி மழை.

மழையின் வாசமடங்கிய
பிறகான வளியில்,
இன்னமும்
முத்த எச்சிலின் நெடி
கலந்த பிசுபிசுப்பானது
காதலாய்
கனந்து கொண்டிருக்கிறது.

மெட்டுக்கு பாட்டு!

கடந்து போகும் எல்லா முகங்களும் ஏற்கனவே தெரிந்த வேறு யாரோவொருவரின் முகத்தை ஞாபகப்படுத்திப் போகின்றன.
- மா.கார்த்திகைப் பாண்டியன்.

****************************************************************

மேற்கண்டதை சாராம்சம் மாறாமல்,கவிதையாக்க முயற்சித்தால், எப்படியிருக்கும் என யோசித்ததால் செய்த பிழைகள்..

விலகிச்செல்லுமெல்லா
முகச் சுருக்கங்களுக்கு
உள்ளாக,யாரோவொருவர்
அதனுள் விட்டுச்சென்ற

நினைவுகள் நீக்கமற

மடிந்து

கிடக்கின்றன.


****************************************************************

பழக்கமாகிப் பின்
நினைவில் மரித்துப்
போன,
யாரோவொருவரின்

நினைவுகள்
எதிவருமெல்லா
முகங்களினூடாக

உயிர்ப்புற்று
மீண்டுமென்
சிந்தைச் சுவர்களில்

நடமாடிப் பின்
செத்துதிர்கிறது.

நினைவுகளில்

பிணவாடை
மட்டும்
நிற்கிறது.

அருவி கிழிக்கும் மௌனம்!

அறையின் மௌனத்தைக்
கிழிக்கும் கூரான‌ கத்தியாய்
இரைந்திறங்குகிறதோர் அருவி.

அருவியின் உடல் முழுவதும்
என் மௌனத்தின் ரத்த அடுக்குகள்
செதில் செதிலாய் கயலினுடம்பைப்
போல் படிகிறது.

நீரில் விலகிச் செல்லும்
மீன் போலவேயென் மௌனமும்
நீரையெதிர்த்து விலகிச் செல்ல
அருவி உடம்பில் எத்தனிக்கிறது.

மேகக் கூட்டங்களின் நீல நிறம்
அருவியின் மேல் பட்டு
எதிரொளிச் சூட்டின் பால்
மௌனம் கரைகிறது.

அருவியிழுக்கும் வண்டலில்
கலந்து கரை புரட்டும் முயற்சியில்
தோற்று மௌனமானதென்
கூட்டின் நிறம் கரையக் கரைய‌
மீண்டும் அறை நிறைக்கிறது.

உறையும் உணர்வுகள்...

துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
எனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் உணர்வுகளைப் போலவே..!
என் எழுத்துகளும்.


முதிர்கன்னி...!

மாப்பிள்ளை வீட்டார்,உள்ளே
நுழையும் போதே பரபரப்பாள்
பக்கத்து வீட்டுச் சிறுமி.

பொண்ணு கையில,
காபி கொடுத்து விடுங்க.

ஆசிரியையாய் மாறி
அம்மா, அரக்க பறக்க
அறிவுறுத்தி அனுப்புவாள்.
இன்னபிற இத்யாதிகளுடன்.

ரெட்டைவடம் சங்கிலி
ரெண்டு லட்சம் ரொக்கமென
அடுக்கடுக்காய் வரும்
பட்டியல்.

அவ்வளவும் முடியாதென்ற
அப்பாவின் இயலாமையை
அம்மாவின் கண்ணீர் சொல்லும்.

ஒவ்வொரு மாதமும்
வானத்திற்கும் பூமிற்குமாய்
அம்மா பரபரப்பாள்.
வரன் வரும்.

ரெட்டைவடம் சங்கிலி,
ரெண்டு லட்சம் ரொக்கம்.
இன்றோ நாளையோ
அடுத்தவளும் குத்தவைத்து
விடுவாள்.

பறவைகளின் வீடு

ஐந்திலக்க ஊதியம், கைப்பேசி
மடிக்கணிணி, பர்செனல் லோன்
நடுவிரல் மோதிரம், மைனர் செயினென
வரிசைக்கிரமாய் ஒவ்வொன்றும்
பொலிவின் களையிழந்து,
கருகிப்போகும் அந்நாளில்தான்
உணரப்பெறுவேன் அவையனைத்தும்
தெருவிளக்கின் அதிஅழுத்த மின்சாரக்
கம்பிகளின் மேல் கட்டப்பட்டிருந்த
பறவைகளின் குடியிருப்பென..!
அப்போது என் ஆசைகளும் இயலாமைகளும்
உடம்பில் உட்புக முடியா உயிர்களென
இவ்வளி மண்டலத்தில் வழி தெரியாமல்
வலம் வந்து கொண்டிருக்க்க் கூடும்.


தொடரும் மௌனம்.

என்னறை முழுவதும் மௌனம்
ஒரு தரையிறங்கும் அருவி போல்
இரைகின்றது.
ரேகை பதியாமல், அதன்
கழுத்து நெரித்து, கொல்ல
முயற்சிக்கின்றேன்.
நான் அதன் கழுத்தைப் பிடிக்கும்
ஒவ்வோர் நிகழ்வும், என்
வாழ்வின் அடக்கமாம்.
நண்பர்கள் எவரேனும் எதேச்சையாய்
கூடிச்சிரிக்கும் தருவாயில், மெல்ல
அது உதிர்ந்து விடக் கூடும்.
அவர்கள் சென்ற பின், மீண்டும்
உதிர்ந்த அதன் குருதித்துகள்கள்
உயிர்பெற்று, ஒரு புள்ளியில்
இணையும் போது, நானென் வாழ்க்கைத்
தொடரின் அடுத்த அத்தியாயத்திற்கு
பயணித்திருப்பேன்.



22 January 2010

நம்பிக்கை....!

யாராலோ செய்யப்பட்டு
என் கைகளுக்குள்
சிக்கிய காகித நிறம்
வெண்மையென இருந்தது

காலியான பேனாவில்
மை ஊற்றினேன்.
சில கவிதைகளாவது
எழுதி விடலாமே என்று.

படித்துப் பார்த்தவன்
முறைத்துப் பார்த்தான்
கவிதையாகவே
மதிக்கவில்லையென்
கவிதையை.

ஏனென அதட்டிய, என்
கைகள் முழுவதிலும்
முளைத்திருந்தன நடுக்கங்கள்.
என் பார்வையிலும்
அவன் தலையினில்
முளைத்திருந்தன கொம்புகள்.

கற்பனைதான் என்று
நினைக்கையில்-அவன்
காறி உமிழ்ந்த வெண்ணிற
எச்சில்,ஊறிப்போய்
சோப்பு நுரைபோல உதிர்ந்தது
காகிதத்திலிருந்து.

கோபமாய் இருந்தாலும்
கவிதையே
செய்ய முடியவில்லை

எனினும் பொங்கியெழுந்தது
வருத்தம்.
அவன் போலவே,நாளை
உலகம் முழுவதும்
உமிழப்போகும் எச்சிலின்
நெடி குறித்து!


துரோகம் தோய்ந்த நட்பு...

கண்ணின் குழிகளை நிரப்பி
வழிகின்றது கண்ணீர் அமிலமாய்.
முகத்தில் சிதறிக் கிடக்கிறது
சிரிப்பு அழிந்த தடங்கள், ரேகைகளாய்.
தலையணைப் பஞ்சுகளாய்
விரக்திகள் புதைக்கின்றன என்னை.
மன‌அறையின் ஜன்னல்வழியாய் எவர்க்கும்
தெரிந்து விடாமல்,பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
என்றோ வழிந்த துயரத்தின் ரத்தம்
படிந்த,எனக்கான அடையாளத்தின்
வாசனை நெடியோடு, கூடிய‌
பலமான சிரிப்பொலியை.
துரோகங்களெனும் கோர நகம்
கொண்ட மனித‌மிருகங்கள் நிறைந்த
இவ்வுலகமென்னும் அறைக்கு
எப்படித் திரும்புவது..?
இனி எப்படி கவலை மறந்து சிரிப்பது..?
எப்படிக் கடப்பது..?
அவனுடன் கைகோர்த்து மகிழ்வுடன் நடந்த
கல்லூரிச் சாலைகளை.
விடியப்போகும் காலைகளின் கனாவாய்,
ஒரு குழந்தையின் கொஞ்ச‌லாய் ,
பிச்சைக்காரனின் முழு வயிற்று உணவாய்,
அணுஅணுவாய் அணுபவித்த அந்த‌
அற்புதத் தருணம் மீண்டு வாரா.
காலம் போடும் மருந்துகளில்,
நினைவுகள் சூழ, நெகிழ்ந்து,
வழியும் கண்ணீர் துடைக்க,
துயரமென்னும் திரை விலக்க‌,
மட்டும் எனக்கு என்றென்றும்
வேண்டும் ,உன் அன்புக்கரங்கள்.


கவிஞன்...

நிலவைப் பற்றி கவிதை எழுத வேண்டும்
மொட்டை மாடிக்கு சென்றான்.
விண்மீன்களைப் பார்த்தான்.
நிலவில் பெண்ணின் முகம் தெரிந்தது.
பாட்டியும் வடை சுட்டாள்.
முதல் வரியை ஆரம்பிக்க,
முயலொன்று தாவியது நிலவில்
நிலவை மறந்து,முயலை நினைக்கலானான்.
இப்போது,நிலவுக்கு காதுகள் முளைத்திருந்தன.
கும்மிருட்டில் தெருநாயகளின் ஊளைச்சத்தம்
நாய்களைப் பற்றி கவிதை எழுத வேண்டும்.



Next மீட் பண்ணுவோம

எதிர்கவிதைகள் இரண்டு...!

ஒரு காசில்ல‌நாளில், கடன் வாங்க‌
ந‌ம் வீட்டிலிருந்து அவன் வீட்டுக்கு
நாம் கடந்த,நடந்த தூரம்
மூன்று மைல்களாக இருந்தது. திருப்பிக்
கொடுக்க இன்று நினைக்கையில்,
அது கொடுக்க முடியாத தொகை
மறக்க முடியாத ர‌ணங்கள் அவை, இன்றும்
கையில் காசில்லா தருணங்கள்.
"இப்படி வாங்குவதில் ஒரு வசதி" என்றாய்
எப்படி என்றவனைப் பார்த்து
நாம் அவனிடம் வாங்கிய கடனை
மறந்து விடுவான் என்றாய்
அன்று முதல், நானும்
எவனுக்கும், ஏன் உனக்கும், வாங்கிய கடனைத்
திருப்பிக் கொடுப்பதை நிறுத்தி வருகிறேன்.
கடன்காரன் திட்டுவதைக் கூட கண்டு கொள்ளாமல்
சூடும்,சொரனையும் இல்லாத உன்னைப் பார்த்து
முதல் தடவை "இப்படித்தான் இருக்குமா" என்றேன்
"நம் வாழ்வா" என்று கேட்ட உன்னிடம்
உன் வாழ்வென‌.. சொல்லி முடிப்பதற்குள்
சீ என்று விலகினாய்!
நல்ல பணம் கொழித்த‌ 'சேட்'டையோ
செழிம்பாக இருக்கும் நண்பனையோ
கடக்க நேர்ந்தால்
நீ கடக்கிறாய் என் நினைவுகளில்
வீட்டிற்கே தேடி வந்து விட்டான்.
'கொடுத்து விட்டேன்' அன்றே
தெரியாமல் போய் விட்டது.
எப்படியும் சில அடிகளை உன்போல்
என்னால் தாங்க‌ முடியாது என்று.
ஏனெனில்,என் பில்டிங் ஸ்ட்ராங்கு.
பேஸ்மென்ட் வீக்கு.

இதோட ஒரிஜினல் இங்கே...!

விநோத சரக்கு..!

வீட்டிற்குள் ஒரேயொரு 'பாட்டில்மூடி' மட்டும் கிடந்தது .
எந்த பாட்டிலுனுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
போதையில் மட்டையாகியிருக்கும் பொழுது
ஏதோ ஒரிடத்திலிருந்து, என்னுள் சரக்கு ஊத்தும்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன். டாஸ்மாக்கில்,
கடையின் மூலையில் இன்னதென அறியமுடியாத நிலையில்
ஒரு இளைஞன் சரக்கடித்துக் கொண்டிருந்தான்.
உள்ளே ஒரு முதியவர் 13ம் டேபிளில்
ஹாட்டையும் பீரையும் இணைத்தால் கிடைக்கும்
சரக்கைப் பற்றிய ஆய்வொன்றை, தன்
மிக்ஸிங்கால் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
நானும் பீர் ,எம்.சி.,வோட்கா என்ற
மூன்று சரக்குகளையும் கலந்து் பார்த்தேன் .
விநோதமான சரக்கொன்று கிடைத்தது .
அவ்விளைஞன் இப்போது மட்டையாகியிருந்தான்.
அவ்விநோத சரக்கின்
முதல் 'பெக்'கிலிருந்து ,கடைசி 'பெக்'வரை
நான் மட்டுமே அடித்தேன் .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த போதையு்ம் தரவேயில்லை.
தண்ணி அதிகமாயிருச்சு.

இதோட ஒரிஜினல் இங்கே...!



என் (னை) காதலி....!

உன்னை காதலிக்கென்றேன் நான்‍-நீ
முறைப்பதன் அர்த்தமெனக்கு புரியவில்லை.
நித்திரை தொலைந்ததடி என்றேன் நான்
அது நிரந்தரமில்லை என்கின்றாய் நீ.

உன் விழி பார்த்து விக்கித்து நிற்கின்றேன் நான்
என்னை விட்டில் பூச்சி போல் பார்க்கின்றாய் நீ.
நீ இன்றியெனக்கு உலகில்லை என்றேன் நான்,
இரப்பதும் அளிப்பதும் காதல‌ல்ல என்கின்றாய் நீ.

காதல் கடிதம் தந்தேனடி உனக்கு-வெறும்
காகிதத்தில் வரைவது காதலா..? என்கின்றாய்.
இனக்கவர்ச்சி எனும் சொல்லை, உன்
நுனிநாக்கில் எனைக் கொல்லும் ஆயுதமாக்குகிறாய்.

பெற்றோரிடம் பேசவா..? என்றேன் நான்-நீயோ
என் பெயர் தெரியுமா உனக்கு..? என்கின்றாய் .
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் என்னை,
எள்ளி நகையாடுவது ஏனடி..?

"கனவிலும் நீதானடி" என்றேன் நான்.நேற்றுதானே
நித்திரை தொலைத்தாயென நகைக்கிறாய் நீ. துயிலில்
காண்பது கனவல்ல, உன்னை துயிலுறத் தடுப்பதே
கனவென, கூண்டேற அப்துல் கலாமா வருவார்..?

வாழ்த்தட்டையில் மட்டுமிருக்காதடி என் காதல்‍-உன்
வாழ்வு வரை இருக்கும்.வார்த்தை ஒன்று மட்டும் சொல்லடி.
வாழும் வரை உனக்காய் வாழ்ந்திருப்பேன் உலகில்-நீ
மட்டும் இல்லையெனில் என்றோ வீழ்ந்திருப்பேன்.!

ஆட்டத்தில் என்னை இழந்து விட்டேன்- என்
அசலை உன் சிந்தையெனும் சந்தையில் விற்றுவிட்டேன்.
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் நீ - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடியாய்.

என்ன நினைத்து உன்னை நினைத்தேனென‌
தெரியவில்லையடி சகியே, இன்று,
என்னையே என்னால் நினைக்க முடியவில்லை.
அது ஏனோ..? என்றும் விளங்கவில்லை.

காதலில் வென்ற காதல‌ரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.

"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.

How to write kavithai?In30 days?

30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி..?.

1. முதலில் கவிதை எழுதுவதற்கு முன், உங்கள் வாயில் வரும் வார்த்தைகளை சும்மா வைரமுத்து போல், நல்ல அழுத்தமான உச்சரிப்போடு உங்கள் ரூம்மேட்டிடமோ அல்லது மனைவியிடமோ சொல்லிப்பாருங்கள். அவர்கள் திட்டினாலோ அல்லது அடித்தாலோ, வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது அரைக் கவிஞன்.

2. சில சமயங்களில் முதலில் கூறிய முயற்சி உயிருக்கு உலை வைக்கும் எனவே, அவ்வாறு தோன்றிய வார்த்தைகளை,ஒரு பேப்பரில் கிறுக்குங்கள். பின் அதை ஒரு கோர்வையாக கோர்க்க,பொருக்குங்கள்.கிறுக்குவதால் நீங்கள் கிறுக்கன் என்றோ, பொருக்குவதால் நீங்கள் "பொருக்கி" என அழைக்கப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல.

3. நீங்கள் எதை பாடுபொருளாக கொள்ளப்போகின்றீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டுதான் மற்றவர்களை கொல்ல வேண்டும். உதாரணமாக "காதலி தின்னு கொடுத்த ஐஸ் குச்சி", "வீட்டிற்குள் வந்து விழுந்த பறவையின் சிறகு","நண்பன் குடித்து மீதம் வைத்த பீர் பாட்டில்", "அவள் குளித்துவிட்டு மீதம் வைத்துள்ள சோப்பு என யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு அந்த பொருள் பிரம்மாண்டமாய் இருந்தால் உத்தமம்.

4. முக்கியமாக கவிதை எழுதும்போது, சில வார்த்தைகளை பிரித்தும் சில வார்த்தைகளை சேர்த்தும் எழுதுதல் நலம் பயக்கும். உதாரணமாக "பெருங்கோபக்காரன்" என்பதை "பெருங்கோ உபகாரன்" என்றும் "எனக்கு என ஒருத்தி" என்பதை " எனக்கெனொருத்தி" என்று எழுதிப் பழக‌ வேண்டும்.

5. எதுகை, மோனையின் அவசியம் கவிதைகளில் மிக மிக முக்கியம்.உதாரணமாக ஊத்துக்குளி ஊர்மிளாவின் ஊர்வம்பென்று, எழுதலாமென்று ஒரு நம் பிரபல கவிஞர் குவிக் கன் முருகன் கவிதை ஒன்றில் படித்த ஞாபகம் அடியேனுக்கு.ஆதலால் ஊஊஊஊஊன்னோ அல்லது தூதூதூதூதூதூன்னோ போட்டு கவிதையெழுதுதல் நலம்.காகாகாகாகாகாகாகான்னு போட்டு கூட எழுதலாம்.

6. இவ்வகையான‌ எதுகை, மோனை தவிர புதியதாய் நீங்கள் யானை, பூனை, சிங்கம் , புலி போன்றவற்றையும் கண்டுபிடித்து உட்புகுத்தினால் நல்லதொரு கவிதையை உங்களால் சமைக்க முடியும்.அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் மற்றும் இன்ன பிற சமாச்சார‌ங்கள் சரியாக இருக்க வேண்டும்.

7. கவிதைகள் இந்த இடத்தில்தான் பிறக்குமென சொல்ல முடியாது, உதாரணமாக நீங்கள் சாலையில் நடக்கும் போது வாகனங்களின் முகத்தில் தென்படும் நம்பர் பிளேட்கள் கூட நல்லதொரு கவிதையை படைக்க வல்லவைதாம்.சில சமயங்களில் சைடிஷாக பயன்படுத்தும் ஊறுகாயும்.எனவே, சாலையில் நடக்கும்போது கூட நீங்கள் அனைத்தையும் கவனித்தபடி நடந்து செல்ல வேண்டும்.(வெளாட்டா நடக்காம அலர்ட்டா நடங்க பாஸு..!)

8. முக்கியமாக நீங்கள் கவிதை எழுதும்போது, வெகு சிலருக்கு மட்டுமே புரியும்படியான வார்த்தைகளை ஆங்காங்கே பயன்படுத்தவேண்டும். உதாரணமாக பிரக்ஞை, யௌவனம், காந்தள்,தற்றிடம்,கழிவிரக்கம் போன்ற வார்த்தைகளை முடிந்த மட்டில் தவிர்த்து விடாதீர்கள்.

9.இதுதான் முக்கியமான பாயிண்ட். நீங்கள் எழுதும் கவிதையானது எளிதில் யாருக்கும் புரிந்து விடக்கூடாது.அவ்வாறு புரிந்து விட்டால், மன்னிக்கவும் நீங்கள் கவிஞனே இல்லை.எனவே முடிந்த அளவு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி சாமானியனுக்கும் புரியாதவகையில் வார்த்தைகளை உங்கள் கவிதைகளில் நீங்கள் புகுத்த வேண்டும்.

10. இப்போது, ஓரளவு உங்களுக்கு ஒரு கவிஞனுக்குரிய ஒரு 'இது' வந்திருக்கும். அதை அப்பிடியே மெயின்டைன் பண்ணி கொண்டுவந்தீர்களேயானால், இந்நாள் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா நாட்களும் தங்களுக்கு கவிதை எழுதவரும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் தற்போது நீங்களும் ஒரு கவிஞன் அல்லது கவிஞை.(?).

டிஸ்கி: ஒரு பின் நவீன‌த்துவ‌ பிரபல கவிஞருடன் சாட்டில் உரையாடும்போது, அவர் கற்றுத்தந்தது.

Next மீட் பண்ணுவோம்....

இப்போதும்
அடிக்கடி
உன் நினைவுகள்
எழும்,
சில் மிஷங்களும்
பரிமாறல்களும்
என்னை அறியாமலேயே
உதட்டில்
புன்னகையைத் தோற்றுவிக்கும்,
வீதியில் போகும் போது
நான் அடிக்கடி சிரிப்பதாக
தெரிந்தவர்கள் கூறுவார்கள்
காரணம் இதுவாகவும்
இருக்கலாம்,
நானும்
பலர் தன் பாட்டிற் சிரிப்பதை
வீதிகளில் கண்டிருக்கிறேன்
அவர்களுக்கும்
இது தான் காரணமோ தெரியவில்லை,
ஆனாலும்
கடந்த காலங்களைப்போல
அந்தச் சிரிப்புக்கு பின்னர்
எழுவதான
’கண்ணீரும் மனச்சோர்வும்’
இப்போது
இல்லை என்றே கூறுவேன்,
ஆயினும்
உன் நினைவுகள்
அடிக்கடி எழும்
ஏதோ எழுதுவேன்
மெளனமாவேன்..

Love Diwaili

புத்தாடை, பட்டாசு, இனிப்புகளில்
வராத என் தீபாவளி,
“தீபாவளி வாழ்த்துகள்” எனும்
இருசொல் குறுஞ்செய்தியில்
ஓடி வருகிறது
உன்னிடமிருந்து
வெடிச்சத்தங்களை விட்டு
பூமலர்தலைக் கொண்டாட
கற்றுக்கொடுத்தவள் நீ!
தீபாவளி விடுமுறைக்கு
நீ வருவாயயென
ஆவலோடு காத்திருக்கிறோம்
நானும் தீபாவளியும்.
வெடிகளைக் கொளுத்தி
கையால் வீசிக்கொண்டிருந்தவள்,
நான் நெருங்கியதும்
பட்டாசுக்கு பயந்தவளைப் போல
என் பின்னே ஒளிகிறாய்.
உன் பயத்தை
நான் ரசிப்பேனென நினைத்து…
அட… நான் ரசிப்பது உன் நடிப்பை!
நீ
திரி கிள்ளிய சந்தோஷத்தில்
செத்தேப் போகிறது
பட்டாசு.
தீபாவளிக்கு முன்னிரவு
வீதியையும் மனதையும் நிறைத்தபடி
வாசலில் வரைந்துவைத்தாய்,
வண்ணப் பொடிகளால் ஓர் ஓவியம்.
தீபாவளிக்கு பின்காலை.
கலைந்து போன வண்ணங்களை
பாவமாய் நீ பெருக்குகையில், நீட்டுகிறேன்…
இரவோடிரவாக என் கேமராவுக்குள்
படமாகிப் போன ஓவியத்தை.
உன் முகத்தில் தீப ஒளி,
என் கண்ணில் கேமரா!
பட்டாசு சத்தங்களைக் காட்டிலும்
இனிப்புகளோடு என்னில் நுழையும்
உன் கொலுசொலி இசைத்துச் செல்கிறது
எனக்கான தீபாவளியை.

Love is Right [or] Not.

காதல் சரியா? தவறா?

காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.


‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும்.

ஏன், இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே. ஆனாலும் அது ஒவ்வொருவரது மனநிலையைப் பொறுத்து உருவெடுத்து அமைகிறது என்பது சிலரது கருத்து.

காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான். ‘எனக்கு எப்படியும் யாராவது ஒருவன் கணவனாக வரப் போகிறான். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற, எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காகவே வாழும் நீயே அந்த ஒருவனாக இருந்தால் நல்லதுதானே’ என்று மனம் போடும் கணக்கு, காதலின் முக்கியக் கூறு!  இது ஆண்களுக்கும் பொருந்தும்.


அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன வாகனம் வைத்திருக்கிறான், அவன் வீட்டில் எத்தனை பேர் என்பதையெல்லாம் சேர்த்து அந்தக் கணக்கைப் போடுவதில் எந்தத் தவறும் இல்லை. ‘பிரதிபலன் பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல். கணக்குப் பார்ப்பது காதலுக்கே களங்கம்’ என்றெல்லாம் இளைஞர்களிடம் பரவலாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்ட வாக்கியங்கள்தான்.

கல்லூரிப் பருவம் என்றதுமே கூடவே வந்து விடுகிறது, காதல்! இனக்கவர்ச்சி ஆபத்தில் சிக்கி பலரும் திசைமாறிப் போய்விட, காதலை ஆக்கப்பூர்வமான ஒரு சக்தியாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்த காதலர்களும் இருக்கின்றார்கள்,
நம் தமிழ்க் கலாச்சாரத்தில் பெண் என்றாலே அவள் தனக்குப் பிடித்தக் காதலைக் கூட முதலில் மறுத்து, பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயற்கையான லாஜிக் இருப்பதால், ‘மனம் துணிந்து காதலைச் சொன்னால் அது வெற்றியாக முடிந்தே ஆக வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் பெண்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது. 

‘காதலைப் பொறுத்தவரை பெண்தான் தேர்ந்தெடுப்பவளாக இருக்கவேண்டும். ஆண் என்பவன் அவள் முடிவுக்கு அடிபணிபவனாக இருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பே, ஆணாதிக்கம் போன்ற ஒருவித ஆதிக்க உணர்வுதான். பணிவது, பணியவைப்பது என்பதையெல்லாம் தாண்டிய பரஸ்பர அன்புதானே காதல்? 

ஒரு பெண்ணுக்கு பிடித்தவன், பிடிக்காதவன் என்று இருப்பதுபோல ஆணுக்கும் இருக்கும்தானே? தன்னிடம் காதல் சொல்லும் பெண்ணையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவனைக் காதலன் என்று சொல்வதா... இல்லை, பெண்பித்தன் என்று சொல்வதா? 


சிலர் நினைக்கலாம். ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது என்பது தவறே இல்லை. அதைக் கூடாது என்று கண்டிப்பது பிற்போக்குத்தனம்தான். ஆனால், எதற்குமே ஒரு எல்லை இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.  பெண்களே நீங்கள் ஒரு ஆணோடு களங்கமில்லாமல் பழகுவதுபோலவே அவனும் உங்களோடு பழகுவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தோளில் கை போட்டுக் கொண்டு வலம் வருவது உங்களைப் பொறுத்தவரை நட்பாக இருக்கலாம். ஆனால், நம் சமூகம் இன்று வரை கல்யாணம் செய்து கொள்வதையே ‘கரம் பிடிப்பது’ என்று சொல்கிறது. உங்கள் மனதில் களங்கமில்லை, விரசமில்லை, தடுமாற்றம் இல்லை! ஆனால், நீங்கள் மட்டுமே உலகமில்லை என்பதை மனதில் ஆணி அடித்தாற்போல எப்போதும் நினைத்திருக்கவேண்டும்! 

பெண்களே ‘நான் நல்லவளாக இருக்கும்போது, யார் என்னை என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்பதை தைரியம் என்று சொல்வதைவிட அசட்டு தைரியம் என்று சொல்வதுதான் சரி. உங்களுடைய பாதுகாப்பு உங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கிற ஆண்களின் ஒழுக்கமும் அதில் பங்கு வகிக்கிறது. 

நாம் கனவு காண்பது போன்ற, ஆண் &பெண் பேதமில்லாத கலாசாரம் வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரையில் கற்பு என்பதோ, கல்யாணம் என்பதோ, பாலியல் தவறுகள் என்பதோ பெரிய விஷயமில்லை. இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள் என்று இருக்கும் பெண்களையும் வெளிநாட்டில் ஒரு ஆண் காதலிப்பான். அதேபோல பெண்களும் காதலிப்பார்கள்.


இன்னொரு விடயம் காதலில் பொய் முக்கிய இடத்தை வகிக்கின்றது

பொய் என்பது அத்தனை ரசிக்கக் கூடியதா? பொய் சொல்லாமல் காதலிக்க முடியாதா? கவிதைக்குப் பொய் அழகு... சரி, காதலுக்கும் அதுதான் அழகா? & இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள், எல்லா காதலர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கின்றது.
நம் எல்லோருக்குமே உண்மையைவிட பொய்யின்மீது அதிக ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. காரணம், உண்மை என்பது எந்த மாற்றமும் இல்லாமல், இருந்தபடியே இருந்துகொண்டு நம்மை ஜீரணிக்கச் சொல்கிறது. ஆனால், பொய் நமக்காகவே உருவாக்கப்படுகிறது. நாமாகவே உருவாக்கிக்கொள்ளலாம். காதலில் ஆண்களே அதிகமாக பொய் சொல்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

நமக்குப் பிடித்த மாதிரியான திருப்பங்களை எல்லாம் கொண்டிருக்கிற ஒரு நாவலைப் போல, பொய் நமக்குப் பிடித்தமான எல்லா அம்சங்களோடும் ஜோடிக்கப்படுகிறது. அதனால்தான் அதை ரசிக்க முடிகிறது. சினிமாவில் வரும் டூயட் பாடல்கள்கூட ஒருவகையில் பொய்தான். நிஜ வாழ்க்கையில் அப்படி எந்த காதல் ஜோடியும் பாடி ஆடுவதில்லை. அதுதான் நிஜம். ஆனால், அந்த நிஜத்தைவிட டூயட் எனும் பொய் ரசிக்கும்படியாக இருக்கிறது, அல்லவா? அப்படித்தான், பொய் சொல்லும் ஆண்களையும் பெண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 

பொய்களில் பல வகை உண்டு. 

எல்லோருக்கும் நன்மை ஏற்படுத்தும் பொய்.
எல்லோரையும் பாதிக்கும் பொய்.
யாரையும் பாதிக்காத, நன்மையும் ஏற்படுத்தாத விளையாட்டுப் பொய்.
நமக்கு மட்டும் நன்மையையும், மற்றவர்களுக் கெல்லாம் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பொய்! 

இப்படி, அதன் பட்டியல் நீளும். சின்னதொரு பொய்கூட சொல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது மிகமிகக் கடினம். ஆனால், அது எப்படிப்பட்ட பொய் என்பதுதான் கவனிக்கவேண்டியது. வள்ளுவர்கூட, 

‘பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனில்’
 
என்று சொல்லியிருக்கிறார். ஆம், பொய்களாக இருந்தாலும், நன்மையை தந்தால், அவை உண்மைக்கு சமமானதே. உண்மையாக இருந்தாலும், அடுத்தவரை துன்பப்படுத்தினால் அவை பொய்க்கு நிகரானதே. 

காதலின் கெட்ட குணம் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருவனை பிடித்துப் போகும் வரைதான், அவன் செய்யும் நல்லது கெட்டது பற்றிய ஆராய்ச்சியெல்லாம். அதன் பிறகு மனம் ஏதாவது ஒரு குருட்டுக் காரணம் சொல்லி அவன் செய்கையையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்.

காதலுக்குள்ளும் இல்லறத்துக்குள்ளும் பொய் உலவுவது என்றைக்கிருந்தாலும் ஆபத்துதான். ‘சின்னப் பொய் தானே’ என்ற சமாதானம் அர்த்தமற்றது. அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படும் எல்லா பொய்யுமே பெரிய பொய்தான். எனவே காதலர்களே, தம்பதிகளே ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

அடுத்து, சில ஆண்கள் பெண்களிடம் மிகவும் தாழ்வான எண்ணத்தை கொண்டிருப்பார்கள். 

எப்படிப்பட்ட பொண்ணாக இருந்தாலும் சரி  நாலு வரி புகழ்ந்து பேசினா போதும். நம்பளையே சுத்தி சுத்தி வருவாங்க’ என்று நினைப்பினைக் கொண்ட ஆண்களும் இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தப்பில்லை அப்படி ஆண்கள் நினைப்பதற்கு காரணமாக சில பெண்களும் நடப்பதனாலேயே ஆண்களிடம் இவ்வாறான எண்ணங்கள் நிலைகொண்டிருக்கின்றன.

 ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’
‘இந்த ட்ரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு’
‘உங்க குரல் இருக்கே.. ஸ்வீட்டோ ஸ்வீட்!’ 
உங்கள் கூந்தல் ரொம்ப அழகாக இருக்குது

 பெண்களை ‘காதல் கடலில் வீழ்த்த’ இப்படி ஏகப்பட்ட வாசகங்களை சில ஆண்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களும் புகழ்ச்சியின் உச்சத்தால் கண்மூடித்தனமாக காதல் கடலில் மூழ்கின்றனர். பெண்கள் ‘எல்லோருமே’ வர்ணனைக்கு மயங்குகிறவர்கள் என்று ஒரு சிலர் இப்படி மெத்தனமாகப் பேசிக் கொண்டு திரிவதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் அறியாமையாலும் எதையும் எளிதாக நம்பிவிடும் வெகுளித்தனத்தாலும் இன்றுவரை இப்படிப்பட்ட ஆண்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், எவனோ ஒருவன், தேவையில்லாமல் நம்மிடம் வர்ணனைகளை வார்க்கிறான்.. பொய் பொய்யாகப் பொழிகிறான் என்றால், ‘அவன் நோக்கம் என்னவாக இருக்கும்..’ என்பதை பெண்கள் சிந்திக்க வேண்டும். இனிமேலாவது சிந்திப்பார்களா பெண்கள் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் காதலை எடுத்துக்கொண்டால்,  பெண்மனம் இலகுவில் ஏமாறும் மனம். ஆணின் மனம் குரங்குமனம்(எப்போ இன்னொரு கிளை தாவும் என்பது ஐயமே)


உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறவன் என்றால், அவன்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கூசும் அளவுக்கா வர்ணிப்பான்? சிந்தியுங்கள் பெண்களே..!

அதற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் அப்படிப்பட்ட வர்ணனை பார்ட்டிகளை ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தத் தேவையில்லை. பொய் என்று தெரிந்தாலும் நம்மைப் பற்றி உயர்வாக ஒருவர் பேசும்போது, ஒருவித உற்சாகம் மனதில் பிறக்கத்தான் செய்யும். ஒரு சின்னப் புன்னகை, ஒரு ‘தங்க்யூ’ போன்றவற்றால் அவர்களை சமாளித்து, கடந்தும் விடலாம்.  

அதை விட்டுவிட்டு, போயும்போயும் ஒரு வெற்றுப் புகழ்ச்சிக்காக வாழ்க்கையையே ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்குப் போவதில், எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்ய.. ஒருசிலர் காதலில் ஆண்களின் வர்ணனைக்கு ஆட்கொண்டு தம் வாழ்க்கையை அழித்த பெண்களும் உள்ளனர். 

ஒரு பெண், ஒரு அந்நிய ஆணிடம், ‘நீ மன்மதன் மாதிரி இருக்கிற.. உன்னுடைய கண் ரொம்ப அழகு.., மீசை வீரமானவன் என்று சொல்லுது, தோள்கள் அழகாக இருக்குது ’ என்றெல்லாம் வர்ணித்து, அவனை மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை! ‘தனக்கானவனிடம் மட்டுமே அப்படி நடந்து கொள்ளவேண்டும்’ என்று தனக்குள்ளாகவே ஒரு ஒழுக்கத்தை வகுத்துக் கொண்டு காதலிக்கிறாள், வாழ்கிறாள். ஆனால் அந்த ஒழுக்கம் ஆணிடமும் இருக்க வேண்டாமா? அந்நியப் பெண்களை வர்ணிக்கும் ஆண்களையெல்லாம் அந்த ஒழுக்கத்தை மீறியவர்களாகக் கருதிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே. 

காதலில் ஆண்கள் உன்னையே காதலிக்கிறேன் உன்னையே திருமணம் செய்துகொள்வேன்  என நம்பவைத்து எல்லைமீறிவிட்டு ஆளே காணாமல் போயிடுவார்கள்.

பெண்களே..!உங்களை நோக்கி வீசப்படுவது தூண்டிலா, தூய அன்பா என்பதைத் துப்பறிந்து தப்பித்துக் கொள்வது தான் இந்த வயதில் உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் சவால்! 

 பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் என்பவள் தேனீயாகவே வாழவேண்டும்.



இதோ காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்காக ஒரு சின்ன கதை.

காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’ என்று அதில் எழுதியிருந்தது. 

அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒரு கடிதம்... உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’ 

நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ... கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது. 

‘கிட்டாதாயின் வெட்டென மற’. அவ்வளவுதான்! 

‘‘காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மையோ இல்லையோ மூளையில்லை என்பது உண்மை’’ BY.ஆதித்தன்.

Friday 23 December 2011

காதல் தோல்வி கூடல் காதலுக்காக மட்டுமே கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்.. சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..? இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..) இதுவும் என் காதலுக்காகத் தானே..!!காதல் தோல்வி கூடல் காதலுக்காக மட்டுமே கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்.. சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..? இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..) இதுவும் என் காதலுக்காகத் தானே..!!

காதல் தோல்வி

கூடல்
காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்..
சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..)
இதுவும் என் காதலுக்காகத் தானே..!! BY.ஆதித்தன்

life within a circle

வட்டத்துக்குள் வாழ்க்கை

க.ஆதித்தன்
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது போலும்
ஒன்றுமே இல்லாதது போலும்
தோன்றுகிறது
தூரத்தில் கயிறுதானேயென்று
அலட்சியமாக வந்தால்
கிட்டத்தில் பாம்பாகிறது
துரோகக் கழுகு
என்னை வட்டமிடுகிறது
எங்கு போயினும்
மரண சர்ப்பம்
என்னைத் துரத்துகிறது
வாழ்க்கை வட்டம்
நிறைவுறும் போது
எனக்காக எதுவும்
மிச்சமிருக்காது
மாம்சம் சாம்பலாகும்
நினைவுகள் சூன்யமாகும்
இன்னார் இருந்தாரென்பதை
இவ்வுலகம்
சீக்கிரத்தில் மறந்து போகும்.

Thursday 22 December 2011

நீ....வேண்டும் நிலவே ... 

அழகே ...
வானில் மிதக்கும்
நட்சதிரங்களை விட
அதிகமாக மிதக்கிறது ...
உனது அழகான
கனவுகளும் நினைவுகளும்
என் இதயத்தில் ....!
எண்ணி பார்பதற்கு
நீதான் அருகில் இல்லையடி.......!!BY.ஆதித்தன்.

kankal.

பேசுகின்ற
உன்கண்களோடு
பேசுகையில்
நான்
பறந்துகொண்டிருக்கிறேன்
அழுகின்ற
உன் கண்களோடு
பேசுகையில்
நான்
இறந்துகொண்டிருக்கிறேன்.BY ஆதித்தன்.

Tuesday 20 December 2011

NATPU VS LOVE


en_pakkam_image1

நட்பா? காதலா?

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               நட்பின் காதலும்,
               காதலின் நட்பும்
. BY.ஆதித்தன்.