Tuesday 27 December 2011

உயிர்த்தெழுதல்!

இரவொன்றுக்கு ஒன்று வீதமென
பேய்க் கதைகள் பல
சொன்ன பாட்டியவள்
உக்கிரமாய் வெயில் பெய்த
நாளொன்றில்
மரித்துப் போனாள்!

அவளைப் புதைத்த
நாளின் இரவில்,
ஊரை வலம் வந்த
கருப்பண்ண சாமியின் குதிரை
எனக்கான கதையை
காற்றில்
எழுதிச் சென்றது.

நட்பு!

பழையன கழித்தலில்
சிக்கியது
நண்பனொருவன் முன்பு
எழுதிய கடிதமொன்று!
கடிதத்தில் நண்பனின்
பெயரிருந்த இடம்
கரையான் அல்லது
க‌ரையான்களுக்கு
இனித்திருக்க வேண்டும்.

யாரிவன் என்ற கேள்வி
நினைவுகளின் எண்ணெயில்
வழுக்கிக் கொண்டே
இருந்தது பதிலேயின்றி.
கடைத் தெருவில்,
மிட்டாய் திருடிய சக‌
கால்சட்டைகளையும்
சுவரேறி சிறுநெல்லி
பறித்த இளம்பிராயங்களையும்
Facebook- ல் பிடிப்பது
சற்று கடினம்தான்!

தேடல்!

மனப் பாலையின்
சுடுமணல்
பாதச் சுவடுகளில்
எங்கிருக்கிறது எனக்கான
கொலுசு
அணிந்த பாதத்தின்
சுவடு.

மழை
கரைத்திருக்கலாம்..
காற்றானது
கலைத்திருக்கலாம்.
எதுவாகினும்,
மீட்டெடுக்க முடியாத
தருணங்களின்
தொகுப்புதான் காதல்!

தொட்டி மீன் !

மனிதர்களற்ற வீட்டின்
தொட்டியினுள் சலனமற்று
வாழ்தலின் பொருட்டு
உலாவும் மீனுக்கு
சமுத்திரத்தின் சுதந்திரமோ
வலை நோக்கிய போராட்டமோ
எதுவாகினும்
தெரிவதில்லை!

அகாலப்பறவை...

அதியுயரத்தில் சிறகடிக்கும்
ஃபீனிக்ஸின் இறகு நுனிதனில்
துயரங்களனைத்தும்
உடன் பறக்கும் உணர்வில்
அமர்ந்திருக்கிறேன்.

கீழ் நிலத்தடி நீரில்
குட்டைக்கால் வாத்துகள்
நீந்திச் செல்லும் சலனம்
செவி மடல்களை உரச,
ஆகாயத்திலிருக்கும்
சிறு தெளிவு
கிடைக்கிறது.
உடன் பயமும்.

மேலெழும்பும் பயத்தின் உயரம்,
ஃபீனிக்ஸின் உயரத்தை விட
அதிகமாகதிகமாக,
மெல்ல மெல்ல‌
கீழிறங்குகிறேன்.

படுக்கை விரிப்புத்
தலையணையையென்
கண்ணீர் நனைத்திருந்த‌து.
நாக்கு முழுவதும்
உறைக்கும் உவர்ப்பு.
அவ்வகால‌த்தின் மறுபுறம்
அந்த ஃபீனீக்ஸ்
எரிந்து போயிருக்கலாம்!

உடலின் மொழி..

மொழிகளனைத்தும் மறந்து
சங்கேதச் செய்கைகளையென்
வாழ்வின் ஊடு சரடாய்க்
கொண்டிருக்கும் நிலையில்,
பின்னிரவின் மேஜை விளக்கொளியில்
உன் மார்பில் முகம் புதைத்து
எனக்கான உலகின் வாசல்
தொடும் முனைப்புக்காய்
உன்னில் முயங்குகிறேன்.

முகம் நிமிர்த்தி, உன்
இமையின் மெல்லிய‌
அழுத்தத்திலினால் வழியும்
கண்ணீரானது என்னைத் தொட‌
எனக்கே எனக்கு
மட்டுமேயான மொழியாய்
என்னுள்ளே நீ
நிறைகிறாய்.

முத்தப் பிசுபிசுப்பு..

இலக்கையடைந்த கப்பலின்
நங்கூரப் பாய்ச்சலினுடைய
அதிர்வுகள் கடலினுள்ளிருந்து
மேலேறி ஒலிக்கும் வெளியில்,
மிதந்து வந்தது அன்றவள்
அனுப்பிய முத்தமொன்று.

இராஜாளிப் பறவையின்
அலகையொத்தென்
அதரங்கள் குவித்து
நான் அனுப்பிய முத்தத்தின்
பயணம் அமைந்ததுமதை
நோக்கியே.

இவ்விரண்டும் இணைந்த
தருவாயில், ஆகாயம்
கிழிந்து பொழிந்தது
ஆலங்கட்டி மழை.

மழையின் வாசமடங்கிய
பிறகான வளியில்,
இன்னமும்
முத்த எச்சிலின் நெடி
கலந்த பிசுபிசுப்பானது
காதலாய்
கனந்து கொண்டிருக்கிறது.

மெட்டுக்கு பாட்டு!

கடந்து போகும் எல்லா முகங்களும் ஏற்கனவே தெரிந்த வேறு யாரோவொருவரின் முகத்தை ஞாபகப்படுத்திப் போகின்றன.
- மா.கார்த்திகைப் பாண்டியன்.

****************************************************************

மேற்கண்டதை சாராம்சம் மாறாமல்,கவிதையாக்க முயற்சித்தால், எப்படியிருக்கும் என யோசித்ததால் செய்த பிழைகள்..

விலகிச்செல்லுமெல்லா
முகச் சுருக்கங்களுக்கு
உள்ளாக,யாரோவொருவர்
அதனுள் விட்டுச்சென்ற

நினைவுகள் நீக்கமற

மடிந்து

கிடக்கின்றன.


****************************************************************

பழக்கமாகிப் பின்
நினைவில் மரித்துப்
போன,
யாரோவொருவரின்

நினைவுகள்
எதிவருமெல்லா
முகங்களினூடாக

உயிர்ப்புற்று
மீண்டுமென்
சிந்தைச் சுவர்களில்

நடமாடிப் பின்
செத்துதிர்கிறது.

நினைவுகளில்

பிணவாடை
மட்டும்
நிற்கிறது.

அருவி கிழிக்கும் மௌனம்!

அறையின் மௌனத்தைக்
கிழிக்கும் கூரான‌ கத்தியாய்
இரைந்திறங்குகிறதோர் அருவி.

அருவியின் உடல் முழுவதும்
என் மௌனத்தின் ரத்த அடுக்குகள்
செதில் செதிலாய் கயலினுடம்பைப்
போல் படிகிறது.

நீரில் விலகிச் செல்லும்
மீன் போலவேயென் மௌனமும்
நீரையெதிர்த்து விலகிச் செல்ல
அருவி உடம்பில் எத்தனிக்கிறது.

மேகக் கூட்டங்களின் நீல நிறம்
அருவியின் மேல் பட்டு
எதிரொளிச் சூட்டின் பால்
மௌனம் கரைகிறது.

அருவியிழுக்கும் வண்டலில்
கலந்து கரை புரட்டும் முயற்சியில்
தோற்று மௌனமானதென்
கூட்டின் நிறம் கரையக் கரைய‌
மீண்டும் அறை நிறைக்கிறது.

உறையும் உணர்வுகள்...

துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
எனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் உணர்வுகளைப் போலவே..!
என் எழுத்துகளும்.


முதிர்கன்னி...!

மாப்பிள்ளை வீட்டார்,உள்ளே
நுழையும் போதே பரபரப்பாள்
பக்கத்து வீட்டுச் சிறுமி.

பொண்ணு கையில,
காபி கொடுத்து விடுங்க.

ஆசிரியையாய் மாறி
அம்மா, அரக்க பறக்க
அறிவுறுத்தி அனுப்புவாள்.
இன்னபிற இத்யாதிகளுடன்.

ரெட்டைவடம் சங்கிலி
ரெண்டு லட்சம் ரொக்கமென
அடுக்கடுக்காய் வரும்
பட்டியல்.

அவ்வளவும் முடியாதென்ற
அப்பாவின் இயலாமையை
அம்மாவின் கண்ணீர் சொல்லும்.

ஒவ்வொரு மாதமும்
வானத்திற்கும் பூமிற்குமாய்
அம்மா பரபரப்பாள்.
வரன் வரும்.

ரெட்டைவடம் சங்கிலி,
ரெண்டு லட்சம் ரொக்கம்.
இன்றோ நாளையோ
அடுத்தவளும் குத்தவைத்து
விடுவாள்.

பறவைகளின் வீடு

ஐந்திலக்க ஊதியம், கைப்பேசி
மடிக்கணிணி, பர்செனல் லோன்
நடுவிரல் மோதிரம், மைனர் செயினென
வரிசைக்கிரமாய் ஒவ்வொன்றும்
பொலிவின் களையிழந்து,
கருகிப்போகும் அந்நாளில்தான்
உணரப்பெறுவேன் அவையனைத்தும்
தெருவிளக்கின் அதிஅழுத்த மின்சாரக்
கம்பிகளின் மேல் கட்டப்பட்டிருந்த
பறவைகளின் குடியிருப்பென..!
அப்போது என் ஆசைகளும் இயலாமைகளும்
உடம்பில் உட்புக முடியா உயிர்களென
இவ்வளி மண்டலத்தில் வழி தெரியாமல்
வலம் வந்து கொண்டிருக்க்க் கூடும்.


தொடரும் மௌனம்.

என்னறை முழுவதும் மௌனம்
ஒரு தரையிறங்கும் அருவி போல்
இரைகின்றது.
ரேகை பதியாமல், அதன்
கழுத்து நெரித்து, கொல்ல
முயற்சிக்கின்றேன்.
நான் அதன் கழுத்தைப் பிடிக்கும்
ஒவ்வோர் நிகழ்வும், என்
வாழ்வின் அடக்கமாம்.
நண்பர்கள் எவரேனும் எதேச்சையாய்
கூடிச்சிரிக்கும் தருவாயில், மெல்ல
அது உதிர்ந்து விடக் கூடும்.
அவர்கள் சென்ற பின், மீண்டும்
உதிர்ந்த அதன் குருதித்துகள்கள்
உயிர்பெற்று, ஒரு புள்ளியில்
இணையும் போது, நானென் வாழ்க்கைத்
தொடரின் அடுத்த அத்தியாயத்திற்கு
பயணித்திருப்பேன்.



22 January 2010

நம்பிக்கை....!

யாராலோ செய்யப்பட்டு
என் கைகளுக்குள்
சிக்கிய காகித நிறம்
வெண்மையென இருந்தது

காலியான பேனாவில்
மை ஊற்றினேன்.
சில கவிதைகளாவது
எழுதி விடலாமே என்று.

படித்துப் பார்த்தவன்
முறைத்துப் பார்த்தான்
கவிதையாகவே
மதிக்கவில்லையென்
கவிதையை.

ஏனென அதட்டிய, என்
கைகள் முழுவதிலும்
முளைத்திருந்தன நடுக்கங்கள்.
என் பார்வையிலும்
அவன் தலையினில்
முளைத்திருந்தன கொம்புகள்.

கற்பனைதான் என்று
நினைக்கையில்-அவன்
காறி உமிழ்ந்த வெண்ணிற
எச்சில்,ஊறிப்போய்
சோப்பு நுரைபோல உதிர்ந்தது
காகிதத்திலிருந்து.

கோபமாய் இருந்தாலும்
கவிதையே
செய்ய முடியவில்லை

எனினும் பொங்கியெழுந்தது
வருத்தம்.
அவன் போலவே,நாளை
உலகம் முழுவதும்
உமிழப்போகும் எச்சிலின்
நெடி குறித்து!


துரோகம் தோய்ந்த நட்பு...

கண்ணின் குழிகளை நிரப்பி
வழிகின்றது கண்ணீர் அமிலமாய்.
முகத்தில் சிதறிக் கிடக்கிறது
சிரிப்பு அழிந்த தடங்கள், ரேகைகளாய்.
தலையணைப் பஞ்சுகளாய்
விரக்திகள் புதைக்கின்றன என்னை.
மன‌அறையின் ஜன்னல்வழியாய் எவர்க்கும்
தெரிந்து விடாமல்,பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
என்றோ வழிந்த துயரத்தின் ரத்தம்
படிந்த,எனக்கான அடையாளத்தின்
வாசனை நெடியோடு, கூடிய‌
பலமான சிரிப்பொலியை.
துரோகங்களெனும் கோர நகம்
கொண்ட மனித‌மிருகங்கள் நிறைந்த
இவ்வுலகமென்னும் அறைக்கு
எப்படித் திரும்புவது..?
இனி எப்படி கவலை மறந்து சிரிப்பது..?
எப்படிக் கடப்பது..?
அவனுடன் கைகோர்த்து மகிழ்வுடன் நடந்த
கல்லூரிச் சாலைகளை.
விடியப்போகும் காலைகளின் கனாவாய்,
ஒரு குழந்தையின் கொஞ்ச‌லாய் ,
பிச்சைக்காரனின் முழு வயிற்று உணவாய்,
அணுஅணுவாய் அணுபவித்த அந்த‌
அற்புதத் தருணம் மீண்டு வாரா.
காலம் போடும் மருந்துகளில்,
நினைவுகள் சூழ, நெகிழ்ந்து,
வழியும் கண்ணீர் துடைக்க,
துயரமென்னும் திரை விலக்க‌,
மட்டும் எனக்கு என்றென்றும்
வேண்டும் ,உன் அன்புக்கரங்கள்.


கவிஞன்...

நிலவைப் பற்றி கவிதை எழுத வேண்டும்
மொட்டை மாடிக்கு சென்றான்.
விண்மீன்களைப் பார்த்தான்.
நிலவில் பெண்ணின் முகம் தெரிந்தது.
பாட்டியும் வடை சுட்டாள்.
முதல் வரியை ஆரம்பிக்க,
முயலொன்று தாவியது நிலவில்
நிலவை மறந்து,முயலை நினைக்கலானான்.
இப்போது,நிலவுக்கு காதுகள் முளைத்திருந்தன.
கும்மிருட்டில் தெருநாயகளின் ஊளைச்சத்தம்
நாய்களைப் பற்றி கவிதை எழுத வேண்டும்.



Next மீட் பண்ணுவோம

எதிர்கவிதைகள் இரண்டு...!

ஒரு காசில்ல‌நாளில், கடன் வாங்க‌
ந‌ம் வீட்டிலிருந்து அவன் வீட்டுக்கு
நாம் கடந்த,நடந்த தூரம்
மூன்று மைல்களாக இருந்தது. திருப்பிக்
கொடுக்க இன்று நினைக்கையில்,
அது கொடுக்க முடியாத தொகை
மறக்க முடியாத ர‌ணங்கள் அவை, இன்றும்
கையில் காசில்லா தருணங்கள்.
"இப்படி வாங்குவதில் ஒரு வசதி" என்றாய்
எப்படி என்றவனைப் பார்த்து
நாம் அவனிடம் வாங்கிய கடனை
மறந்து விடுவான் என்றாய்
அன்று முதல், நானும்
எவனுக்கும், ஏன் உனக்கும், வாங்கிய கடனைத்
திருப்பிக் கொடுப்பதை நிறுத்தி வருகிறேன்.
கடன்காரன் திட்டுவதைக் கூட கண்டு கொள்ளாமல்
சூடும்,சொரனையும் இல்லாத உன்னைப் பார்த்து
முதல் தடவை "இப்படித்தான் இருக்குமா" என்றேன்
"நம் வாழ்வா" என்று கேட்ட உன்னிடம்
உன் வாழ்வென‌.. சொல்லி முடிப்பதற்குள்
சீ என்று விலகினாய்!
நல்ல பணம் கொழித்த‌ 'சேட்'டையோ
செழிம்பாக இருக்கும் நண்பனையோ
கடக்க நேர்ந்தால்
நீ கடக்கிறாய் என் நினைவுகளில்
வீட்டிற்கே தேடி வந்து விட்டான்.
'கொடுத்து விட்டேன்' அன்றே
தெரியாமல் போய் விட்டது.
எப்படியும் சில அடிகளை உன்போல்
என்னால் தாங்க‌ முடியாது என்று.
ஏனெனில்,என் பில்டிங் ஸ்ட்ராங்கு.
பேஸ்மென்ட் வீக்கு.

இதோட ஒரிஜினல் இங்கே...!

விநோத சரக்கு..!

வீட்டிற்குள் ஒரேயொரு 'பாட்டில்மூடி' மட்டும் கிடந்தது .
எந்த பாட்டிலுனுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
போதையில் மட்டையாகியிருக்கும் பொழுது
ஏதோ ஒரிடத்திலிருந்து, என்னுள் சரக்கு ஊத்தும்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன். டாஸ்மாக்கில்,
கடையின் மூலையில் இன்னதென அறியமுடியாத நிலையில்
ஒரு இளைஞன் சரக்கடித்துக் கொண்டிருந்தான்.
உள்ளே ஒரு முதியவர் 13ம் டேபிளில்
ஹாட்டையும் பீரையும் இணைத்தால் கிடைக்கும்
சரக்கைப் பற்றிய ஆய்வொன்றை, தன்
மிக்ஸிங்கால் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
நானும் பீர் ,எம்.சி.,வோட்கா என்ற
மூன்று சரக்குகளையும் கலந்து் பார்த்தேன் .
விநோதமான சரக்கொன்று கிடைத்தது .
அவ்விளைஞன் இப்போது மட்டையாகியிருந்தான்.
அவ்விநோத சரக்கின்
முதல் 'பெக்'கிலிருந்து ,கடைசி 'பெக்'வரை
நான் மட்டுமே அடித்தேன் .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த போதையு்ம் தரவேயில்லை.
தண்ணி அதிகமாயிருச்சு.

இதோட ஒரிஜினல் இங்கே...!



என் (னை) காதலி....!

உன்னை காதலிக்கென்றேன் நான்‍-நீ
முறைப்பதன் அர்த்தமெனக்கு புரியவில்லை.
நித்திரை தொலைந்ததடி என்றேன் நான்
அது நிரந்தரமில்லை என்கின்றாய் நீ.

உன் விழி பார்த்து விக்கித்து நிற்கின்றேன் நான்
என்னை விட்டில் பூச்சி போல் பார்க்கின்றாய் நீ.
நீ இன்றியெனக்கு உலகில்லை என்றேன் நான்,
இரப்பதும் அளிப்பதும் காதல‌ல்ல என்கின்றாய் நீ.

காதல் கடிதம் தந்தேனடி உனக்கு-வெறும்
காகிதத்தில் வரைவது காதலா..? என்கின்றாய்.
இனக்கவர்ச்சி எனும் சொல்லை, உன்
நுனிநாக்கில் எனைக் கொல்லும் ஆயுதமாக்குகிறாய்.

பெற்றோரிடம் பேசவா..? என்றேன் நான்-நீயோ
என் பெயர் தெரியுமா உனக்கு..? என்கின்றாய் .
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் என்னை,
எள்ளி நகையாடுவது ஏனடி..?

"கனவிலும் நீதானடி" என்றேன் நான்.நேற்றுதானே
நித்திரை தொலைத்தாயென நகைக்கிறாய் நீ. துயிலில்
காண்பது கனவல்ல, உன்னை துயிலுறத் தடுப்பதே
கனவென, கூண்டேற அப்துல் கலாமா வருவார்..?

வாழ்த்தட்டையில் மட்டுமிருக்காதடி என் காதல்‍-உன்
வாழ்வு வரை இருக்கும்.வார்த்தை ஒன்று மட்டும் சொல்லடி.
வாழும் வரை உனக்காய் வாழ்ந்திருப்பேன் உலகில்-நீ
மட்டும் இல்லையெனில் என்றோ வீழ்ந்திருப்பேன்.!

ஆட்டத்தில் என்னை இழந்து விட்டேன்- என்
அசலை உன் சிந்தையெனும் சந்தையில் விற்றுவிட்டேன்.
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் நீ - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடியாய்.

என்ன நினைத்து உன்னை நினைத்தேனென‌
தெரியவில்லையடி சகியே, இன்று,
என்னையே என்னால் நினைக்க முடியவில்லை.
அது ஏனோ..? என்றும் விளங்கவில்லை.

காதலில் வென்ற காதல‌ரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.

"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.

No comments:

Post a Comment